நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை முதல் காலாண்டில் ரூ.92,950 கோடியாக (1,430 கோடி டாலர்) அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி மேலும் தெரிவித்துள்ளதாவது:
கடந்த நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் (ஜனவரி-மார்ச்) நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ரூ.22,100 கோடியாக (340 கோடி டாலர்) காணப்பட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 0.6 சதவீதமாகும். இந்த நிலையில், நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 1,430 கோடி டாலராக அதிகரித்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 2.4 சதவீதமாகும்.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கால அளவில் நாட்டின் ஏற்றுமதியை காட்டிலும் இறக்குமதி வெகுவாக அதிகரித்தது. இதனால், 4,120 கோடி டாலர் அளவுக்கு வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாகவே நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை கணிசமாக உயர்ந்தது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.