சுற்றுப் புறச் சீர்கேட்டை ஏற்படுத்துவதில் பெரும்பங்கு வகிப்பது பிளாஸ்டிக் பைகள். வழக்கத்திலிருந்து அதனை அகற்ற எத்தனை சட்டங்கள் போட்டாலும் அவற்றால் பலன் கிட்டியதா என்றால் இல்லை என்றுதான் பதில் கூற வேண்டியிருக்கும். காடு மேடுகளைத் தாண்டி தற்போது கடற்பரப்பிலும் டன் கணக்கான பிளாஸ்டிக் கழிவுகளை கண்டெடுப்பதுதான் வேதனையிலும் வேதனை. இதனால், நிலவாழ் உயிரினங்கள் மட்டுமின்றி கடல்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது.
இதுபோன்ற துயரங்களுக்கு முடிவுகட்ட பிளாஸ்டிக் அரக்கனை ஒழித்துக் காட்டியே தீருவது என மத்திய ஜவுளி துறை அமைச்சகம் சூளுரை செய்து களத்தில் இறங்கியுள்ளது. இதற்காக, ஆமதாபாதில் உள்ள தேசிய வடிவமைப்பு மையத்தின் உதவியை அந்த அமைச்சகம் நாடியுள்ளது.
தேசிய வடிவமைப்பு மையம் பிளாஸ்டிக் பைகளை வழக்கத்திலிருந்து அகற்ற சரியான மாற்று சணல் தான் என முடிவெடுத்துள்ளது. அதனை சாமர்த்தியமாக பண்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு பணிகளில் அந்த மையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
குறிப்பாக, பொதுமக்கள் பல முறை பயன்படுத்த கூடிய வகையிலான சணல் பைகளை உருவாக்கும் பணிகளில் அந்த மையம் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளது. எளிதில் மக்கக்கூடிய சணல் பைகளை பயன்படுத்துவதால் சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு என்பது பெருமளவுக்கு கட்டுப்படுத்தப்படும். இதன் பயன்பாட்டை ஊக்குவிக்கத் தேவையான அனைத்து உதவிகளை வழங்க அரசும் தயாராகவே உள்ளது.
அனைவரின் ஒத்துழைப்புடனும் சணல் பைகள் பயன்பாட்டுக்கு வரும் நிலையில் அது பூமிக்கு எமனாக இருக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கே எமனாக மாறும் என சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.