ஃபிளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை கையகப்படுத்தும் நடவடிக்கை முழுமையடைந்து விட்டதாக வால்மார்ட் சனிக்கிழமை அறிவித்தது.
இதுகுறித்து அமெரிக்காவைச் சேர்ந்த வால்மார்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: வால்மார்ட் நிறுவனம், இந்தியாவின் இணைய வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட்டில் மேற்கொண்ட முதலீட்டு நடவடிக்கைகள் முழுமையடைந்து விட்டன. இதையடுத்து, ஃபிளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகள் தற்போது வால்மார்ட் நிறுவனத்தின் வசமாகியுள்ளது. எஞ்சியுள்ள 23 சதவீத பங்குகள் ஃபிளிப்கார்ட்டின் இணை நிறுவனர் பின்னி பன்சால், டென்ஸன்ட், டைகர் குளோபல், மைக்ரோஸாஃப்ட் உள்ளிட்ட இதர பங்குதாரர்களின் வசம் இருக்கும்.
ஃபிளிப்கார்ட் வர்த்தக வளர்ச்சியை ஊக்குவிக்க உதவியாக புதிய பங்கு மூலதனமாக 200 கோடி டாலர் (சுமார் ரூ.14,000 கோடி) முதலீடு செய்யப்படும் என்று வால்மார்ட் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.