பொதுத் துறையைச் சேர்ந்த மின் உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான பி.ஹெச்.இ.எல். (பெல்) அதன் முதலீட்டாளர்களுக்கு 40% இடைக்கால ஈவுத்தொகையை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அதுல் சோப்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திட்டங்களை வேகமாக நிறைவேற்றுவதற்காக வகுக்கப்பட்ட விவேகமான வியூகங்கள், சிக்கன நடவடிக்கை, முடங்கிக் கிடந்த திட்டங்களை புதுப்பிப்பதற்காக மேற்கொண்ட ஒருங்கிணைந்த முயற்சிகள் ஆகியவற்றின் பலன் டிசம்பர் காலாண்டில் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் விற்றுமுதல் 6,494.44 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவு விற்றுமுதலான ரூ.6,187.48 கோடியுடன் ஒப்பிடுகையில் இது கணிசமான அதிகரிப்பாகும்.
தனிப்பட்ட நிகர லாபம் ரூ.93.54 கோடியிலிருந்து 64 சதவீதம் உயர்ந்து ரூ.153.19 கோடியானது.
நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத கால அளவில் நிறுவனத்தின் விற்றுமுதல் ரூ.18,017.62 கோடியாக இருந்தது. தனிப்பட்ட நிகர லாபம் ரூ.349.43 கோடியாக காணப்பட்டது.
நடப்பு 2017-18-ஆம் நிதி ஆண்டுக்கு 40 சதவீத இடைக்கால ஈவுத்தொகை வழங்க நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி பங்கு ஒன்றுக்கு இடைக்கால ஈவுத்தொகையான ரூ.0.80 பிப்ரவரி 28-இல் வழங்கப்படும்.
வரும் மாதங்களில் பல்வேறு பிரிவுகளில் புதிய ஆர்டர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.