சென்னையில் தலைமையகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த கார்போரண்டம் யுனிவர்சல் நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு நிகர லாபம் 15 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள நிதியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆண்டின் அக்டோபர் 1-ஆம் தேதி முதல், டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலான நிகழ் நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில், கார்போரண்டம் யுனிவர்சல் நிறுவனத்தின் எக்ஸைஸ் வரி அல்லாத தொகுப்பு நிகர லாபம் ரூ.600 கோடியாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே 3 மாதங்களில் நிறுவனம் ஈட்டிய தொகுப்பு நிகர லாபமான ரூ.520 கோடியைவிட 15 சதவீதம் அதிகமாகும்.
வரிக்குப் பிந்தைய தொகுப்பு லாபத்தைப் பொருத்தவரை, இந்த காலகட்டத்தில் கடந்த நிதியாண்டில் நிறுவனம் ரூ.44 கோடி ஈட்டியிருந்தது. இது, இந்த நிதியாண்டில் 24 சதவீதம் அதிகரித்து ரூ.54 கோடியாக உயர்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டியூப் இன்வெஸ்ட்மென்ஸ் நிகர லாபம் 28% உயர்வு: முன்னதாக, முருகப்பா குழுமத்தின் டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் வெளியிட்ட நிதியறிக்கையில், நிறுவனத்தின் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடையும் 3-ஆவது காலாண்டு வரிக்குப் பிந்தைய லாபம் முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 28 சதவீதம் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.27 கோடியாக இருந்த வரிக்குப் பிந்தைய லாபம், இந்த நிதியாண்டில் ரூ.35 கோடியாக உயர்ந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.