நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டிசிஎஸ்) மூன்றாம் காலாண்டு லாபம் ரூ.6,531 கோடியாக சரிந்தது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான ராஜேஷ் கோபிநாதன் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
சில பிரிவுகளில் சுணக்க நிலை நிலவிய போதிலும், 2017 மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் செயல்திறன் சிறப்பான அளவில் மேம்பட்டுள்ளது. இது எதிர்காலத்திலும் தொடரும்.
அக்டோபர்-டிசம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் அனைத்துப் பிரிவு செயல்பாடுகளின் மூலம் கிடைத்த வருவாய் ரூ.30,904 கோடியாக இருந்தது. 2016 ஆண்டு இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.29,735 கோடியுடன் ஒப்பிடும்போது இது 3.9 சதவீதம் அதிகம்.
கடந்த 2016-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2017 டிசம்பர் காலாண்டில் டிஜிட்டல் வர்த்தக பிரிவு மூலமான வருவாய் 40 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. நிறுவனத்தின் மொத்த வருவாயில் அதன் பங்களிப்பு மட்டும் 22.1 சதவீதமாக உள்ளது.
இருப்பினும், பல்வேறு காரணங்களால் நிகர லாபம் ரூ.6,778 கோடியிலிருந்து 3.6 சதவீதம் குறைந்து ரூ.6,531 கோடியானது.
டிசம்பர் காலாண்டில் டிஜிட்டல் வர்த்தக துறையில் 5 கோடி டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பல்வேறு பிரிவுகளில் புதிய வர்த்தக ஒப்பந்தங்களுக்கான நடவடிக்கைகளும் வேகமெடுத்துள்ளன.
மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தில் ஒட்டுமொத்த அளவில் 12,534 பணியாளர்கள் இணைந்ததையடுத்து, ஒட்டுமொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 3,90,880-ஆக அதிகரித்துள்ளது என்றார்அவர்.