நாட்டின் ஏற்றுமதி சென்ற டிசம்பர் மாதத்தில் 2,703 கோடி டாலராக (ரூ.1,75,695 கோடி) அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது: பொறியியல் சாதனங்கள், பெட்ரோலியப் பொருள்கள் துறை நிறுவனங்களின் ஏற்றுமதி சென்ற டிசம்பரில் விறுவிறுப்பைக் கண்டுள்ளது. இதையடுத்து, அந்த மாதத்தில் ஏற்றுமதி 12.36 சதவீதம் அதிகரித்து 2,703 கோடி டாலரானது.
ஏற்றுமதி அதிகரித்துள்ள அதேசமயத்தில், இறக்குமதியும் 21.12 சதவீதம் உயர்ந்து 4,191 கோடி டாலராகியுள்ளது. இதற்கு, தங்கம், கச்சா எண்ணெய் ஆகியவற்றை அதிக அளவில் இறக்குமதி செய்ததே முக்கிய காரணம். ஏற்றுமதியை காட்டிலும் இறக்குமதி அதிகரித்துள்ளதையடுத்து நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 41 சதவீதம் உயர்ந்து 1,488 கோடி டாலரை எட்டியுள்ளது என வர்த்தக அமைச்சகம் அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.