நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் ரூ.1,799 கோடியாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
மாருதி சுஸுகியின் மொத்த வருவாய் நடப்பு நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் ரூ.19,528.1 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.19,793.3 கோடியாக காணப்பட்டது.
செயல்பாட்டு லாபம் 22.1 சதவீதம் அதிகரித்துள்ளது. நிகர லாபம் ரூ.1,747.2 கோடியிலிருந்து 2.93 சதவீதம் உயர்ந்து ரூ.1,799 கோடியானது.
அதிக வரி விதிப்பு மற்றும் செயல்பாடு சாராத வருவாய் குறைந்து போனதையடுத்து லாபம் சிறிய அளவில் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளதாக மாருதி சுஸுகி அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.