டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆபரண வர்த்தக துறையில் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தும் என தரக்குறியீட்டு நிறுவனமான கேர் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறப்பான பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிக எண்ணிக்கையிலான நடுத்தர வகுப்பு நுகர்வோர் ஆகியவற்றை கணக்கில் கொள்ளும்போது நடுத்தர கால அளவில் தங்கம் மற்றும் வைர ஆபரண துறையின் வர்த்தக வளர்ச்சி என்பது வலுவான நிலையில்தான் உள்ளது.
இருப்பினும், தற்போது அமெரிக்கா மற்றும் சீன நாடுகள் இடையே ஏற்பட்டுள்ள மோதல் உலகளவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிக்கும் அதே நேரம் ரூபாய் மதிப்பில் ஏற்படும் சரிவு என்பது தங்க ஆபரண துறையில் குறுகிய கால அளவில் நிச்சயம் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தும். குறிப்பாக, ஏற்றுமதியில் இதன் பாதிப்பு அதிகம் காணப்படும்.
இருப்பினும், ஆபரண இறக்குமதி வரியை குறைக்க சீனா அண்மையில் முடிவெடுத்துள்ளது இந்திய ஆபரண ஏற்றுமதி துறைக்கு சாதகமான அம்சமாகும் என அந்த நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,281.12 டாலராகவும், இந்தியாவில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.30,765-ஆகவும் உள்ளது.
நடப்பாண்டு மே மாதத்தில் ஆபரண துறையின் ஏற்றுமதி 11சதவீதம் சரிவடைந்தது. இதற்கு, வெள்ளி ஆபரணங்கள் ஏற்றுமதி 74.66 கோடி டாலரிலிருந்து 4.32 கோடி டாலராக வீழ்ச்சி கண்டதும், தங்கப் பதக்கங்கள் ஏற்றுமதி 88 சதவீதம் குறைந்து போனதுமே முக்கிய காரணம் என நவரத்தினங்கள்-ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.