சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை

இந்தியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடர்ந்து ஆறு நாள்களாக சரிவை சந்தித்து வந்த நிலையில் வியாழக்கிழமை திடீர் ஏற்றம் பெற்றது.
சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை

இந்தியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடர்ந்து ஆறு நாள்களாக சரிவை சந்தித்து வந்த நிலையில் வியாழக்கிழமை திடீர் ஏற்றம் பெற்றது.
உலோக இறக்குமதிக்கு வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், குறிப்பிட்ட சில நாடுகளுக்கு இந்த வரி விதிப்பிலிருந்து விலக்களிக்கப்படலாம் என்ற செய்தி வெளியானதையடுத்து சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்படைந்தது. அதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
பல நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்ததை சாதகமாக பயன்படுத்த நினைத்த முதலீட்டாளர்கள் அதுபோன்ற பங்குகளில் தங்களது முதலீட்டை அதிகரித்தனர். குறிப்பாக, கடந்த பல தினங்களாக வீழ்ச்சியை கண்டு வந்த பொதுத் துறை வங்கி பங்குகளுக்கு நேற்றைய வர்த்தகத்தில் தேவை அதிகரித்து காணப்பட்டது. இது, பங்குச் சந்தையின் ஏற்றத்துக்கு சாதகமான அம்சமாகியது.
மும்பை பங்குச் சந்தை ரியல் எஸ்டேட் துறை குறியீட்டெண் அதிகபட்சமாக 1.63 சதவீதம் உயர்ந்தது. இதையடுத்து, வங்கித் துறை குறியீட்டெண் 1.43 சதவீதமும், பொறியியல் சாதனங்கள் 1.12 சதவீதமும், மோட்டார் வாகனம் 0.92 சதவீதமும், மின்சாரம் 0.88 சதவீதமும், நுகர்வோர் சாதனங்கள் 0.78 சதவீதமும், பொதுத் துறை நிறுவன குறியீட்டெண் 0.60 சதவீதமும் உயர்ந்தன.
அதேசமயம், முதலீட்டாளர்களின் வரவேற்பின்றி மருந்து, வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் துறை குறியீட்டெண்கள் சரிவை சந்தித்தன.
நேற்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸில் இடம்பெற்றுள்ள பாரத ஸ்டேட் வங்கி பங்கின் விலை அதிகபட்சமாக 4.09 சதவீதம் உயர்ந்தது. அதைத் தொடர்ந்து, ஐசிஐசிஐ வங்கி, அதானி போர்ட்ஸ், மஹிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி நிறுவனம், ஏஷியன் பெயின்ட்ஸ், எல் & டி, என்டிபிசி, இன்ஃபோசிஸ், மாருதி சுஸுகி, பவர் கிரிட், ஹீரோமோட்டோகார்ப் உள்ளிட்ட நிறுவனப் பங்குகளின் விலை 2.13 சதவீதம் வரை உயர்ந்தன. அதேநேரம், ஸன் பார்மா, யெஸ் வங்கி, டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், கோட்டக் வங்கி, ஓஎன்ஜிசி பங்குகளுக்கு சந்தையில் போதிய வரவேற்பு இல்லை. 
எம்டிஎன்எல், பார்தி ஏர்டெல் மற்றும் ஐடியா பங்குகளின் விலை 1.19 சதவீதம் வரை சரிந்தன.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 318 புள்ளிகள் அதிகரித்து 33,351 புள்ளிகளில் நிலைத்தது. பிப்ரவரி 23-க்கு பிறகு காணப்படும் அதிகபட்ச ஒரு நாள் ஏற்றம் இது.
கடந்த ஆறு வர்த்தக தினங்களில் மட்டும் சென்செக்ஸ் 1,412 புள்ளிகளை இழந்துள்ளது நினைவுகூரத்தக்கது.
தேசிய பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 88 புள்ளிகள் உயர்ந்து 10,242 புள்ளிகளில் நிலைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com