இல்லறம், குழந்தைகள் வளர்ப்பு என சினிமாவை விட்டு விலகியிருந்த ஜோதிகா, சமீபமாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். "36 வயதினிலே' படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கிய ஜோதிகாவின் நடிப்பு குறித்து பரவலான பாராட்டுகள் எழுந்தன. இதையடுத்து அடுத்தடுத்து நடிப்பதில் ஈடுபாடு காட்டினார்.
பல இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்த நிலையில், "குற்றம் கடிதல்' படத்தை இயக்கிய பிரம்மாவை தனது அடுத்த படத்துக்கான இயக்குநராக தேர்வு செய்தார். "36 வயதினிலே' போன்று தன்னை முன்னிறுத்தும் வகையில் இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இப்படத்துக்கான முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ள நிலையில், படத்துக்கு "மகளிர் மட்டும்' என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் இத்தலைப்பில் ஏற்கெனவே படம் வெளிவந்துள்ள நிலையில், முறையான அனுமதி பெற்று இத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதற்காக கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சூர்யா. ஜோதிகாவுடன் ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா ஆகியோர் நடிக்கின்றனர். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஜோதிகா இப்படத்தில் ஆவணப் பட இயக்குநராக நடிக்கிறார்.