விஜயா புரொடக்ஷன்ஸ், நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ், சிவாஜி பிலிம்ஸ் உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்களில் நிர்வாகிகளாக பணியாற்றி வந்த அப்துல் சத்தார், கௌசல்யா இருவரும் இணைந்து தயாரித்து வரும் படம் "ஓ காதலனே.' ஹாசன், வர்ஷா, சுவர்ணலதா, டெல்லி கணேஷ், விஜய் கணேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் எம்.கௌசர். காதல்தான் களம். மறைந்த கவிஞர் உடுமலை நாராயணகவியின் பாடல் வரிகளை ஆதரமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த "விவசாயி' படத்தில் இடம் பெற்ற "நல்ல நல்ல நிலம் பார்த்து...'' என்ற பாடலில் வரும் வரிகளை இதற்காக பயன்படுத்தியுள்ளனர். "கன்னியர்க்கும் காளையர்க்கும் கட்டுப்பாட்டை விதித்து... கற்பு நிலை தவறாத காதற்பயிர் வளர்த்து...'' என்ற வரிகள்தான் அது. தற்கால சமூக மாற்றங்களுக்கு ஏற்ப மாறி வந்துள்ள காதலின் தன்மை குறித்து ஆராயும் விதமாக இக்கதை களம் அமைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. முத்துலிங்கம், தொல்காப்பியன் இருவரும் பாடல்களை எழுதியுள்ளனர். ஜெய் நடேஷ் இசையமைக்கிறார். கே.வி.செந்தில் படத்தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். மே மாத வெளியீடாக படம் திரைக்கு வருகிறது.