ஃப்ரண்ட்ஸ் பெஸ்டிவல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகி வரும் படம் "எய்தவன்.' கலையரசன் கதாநாயகனாக நடிக்கிறார். சாட்னா டைட்ஸ் கதாநாயகியாக நடிக்கிறார். வேல ராமமூர்த்தி, "ஆடுகளம்' நரேன், ராஜ்குமார், சௌமியா, ராதா உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் சக்தி ராஜசேகரன். இந்திய கல்விச்சூழலில் நிலவும் குளறுபடிகளை முன் வைக்கும் விதமாக இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுமைக்குமான கல்வி சூழல், பணத்தை குறிக்கோளாக வைத்து இயங்குவதாக மாறி விட்டது. தலைச்சிறந்த மாணவர்களை உருவாக்குவதற்கு பதிலாக, பணத்தை இலக்காக நோக்கி ஓட வைக்கும் இயந்திரங்களை உருவாக்கி வருகிறது இன்றைய கல்விச் சூழல். இது இந்த தேசத்தின் எதிர்காலத்துக்கு என்னென்ன தீமைகளை விளைவிக்கிறது என்பதை சமூகத்தினரின் பார்வைக்கு எடுத்து வைக்கும் விதமாக படம் உருவாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இப்படம் மே 5-ஆம் தேதி வெளியாகவுள்ளது.