"திருடன் போலீஸ்' படத்தின் மூலம் அறிமுக இயக்குநர்களில் சிறப்பிடம் பெற்றவர் கார்த்திக் ராஜு. தற்போது இவர் எழுதி இயக்கும் படம் "உள்குத்து.' கெனன்யா பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகி வரும் இப்படத்தில் "அட்டகத்தி' தினேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். நந்திதா கதாநாயகியாக நடிக்கிறார். ஸ்ரீமன், பால சரவணன், ஷரத் லோகிதஸ்வா, திலீப் சுப்பராயன், ஜான் விஜய், சாயாசிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படம் குறித்து கார்த்திக் ராஜு கூறுகையில் கடல் சார்ந்த பின்னணியில் உருவாகும் இப்படம் மீனவர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டது. குறிப்பாக மீன் வெட்டும் தொழிலாளார்களின் சூழலை பிரதிபலிப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மீன் வெட்டும் தொழிலாளியான தினேஷுக்கு நிகழும் ஒரு சம்பவம் அவர் சார்ந்த சமூகச் சூழலை எப்படி பாதிக்கிறது. அதிலிருக்கும் சவால்களை அந்த சமூகம் எப்படி கையாள்கிறது என்பதே கதை. நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள முட்டம் கிராமப்புறப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதுவரையிலான என் திரைப் பயணத்தில் இப்படம் முக்கிய பங்கு வகிக்கும். இந்தப் படம் எனக்கு மைல் கல்லாக அமையும் என்கிறார் இயக்குநர்.