தமிழ் இசை ரசிகர்களின் கவனத்துக்குரிய பாடகராக தனி முத்திரை பதித்து வருகிறார் அனந்து. "வேட்டைக்காரன்' படத்தில் இடம் பெற்ற "புலி உறுமுது...புலி உறுமுது...'' பாடலை அதிரடி பாடலாகப் பாடிய இவர், "கபாலி'யில் இடம் பெற்ற ""மாய நதி...'' பாடலிலும் ரசிக்க வைத்தார். "பைரவா' படத்தில் இடம் பெற்ற "பட்டய கௌப்பு...'' இவரின் சமீபத்திய ஹிட் பாடலாக அமைந்துள்ளது. ""பைரவா' படத்தில் ஒரு பாடலை பாடுவதாக இருந்த எனக்கு எந்த பாடல் கிடைக்கும், என்று தெரியாது. இதற்கிடையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மெட்டு போட்டு வைத்திருக்க, அதை கேட்க வேண்டும் என்று விஜய் விரும்பியதால், என்னை அந்த மெட்டில் பாட வைத்து அவருக்கு அனுப்பி வைத்தார். மெட்டை கேட்ட விஜய், பாடகர் குறித்து பேசிய போது, "இந்த குரலே நல்லாதான் இருக்கு... இவரே பாடட்டும்...' என்று அவர் சொல்லிவிட்டார். பிறகு தான் எனக்கு அந்த பாடல் கிடைத்தது. அதே போன்று, விஜய் பாடிய "பாப்பா...பாப்பா...'' பாடல் பதிவின் போதும், என்னை உடன் இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். அதே போல் வைரமுத்துவின் வரிகளை பாடியிருப்பதும், எனக்கு பெருமையாக இருக்கிறது'' என்றார் அனந்து.