பாலிவுட்டில் படங்களை இயக்கத் தொடங்கிய பின்னர், தமிழ் சினிமாவில் அவ்வளவாக கவனம் செலுத்தவில்லை பிரபுதேவா. இதனிடையே கடந்த ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கிய "தேவி' படத்தில் நடித்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடிப்பதற்காக கதைகளைக் கேட்டு வந்தார். குறிப்பாக புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு தரும் வகையில் கதைகளை தேர்வு செய்து வந்தார். இதையடுத்து தற்போது "முண்டாசுப்பட்டி', "இன்று நேற்று நாளை' ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய அர்ஜுன் என்பவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். படத்துக்கு "எங் மங் சங்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. பிரபுதேவாவுக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்கிறார். இயக்குநர் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, பாகுபலி பிரபாகர் கலக்கேயா, சித்ரா லட்சுமணன், அஸ்வின் உள்ளிட்டோர் கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். குருதேவ் ஒளிப்பதிவு செய்யவுள்ள இப்படத்துக்கு அம்ரீஷ் இசையமைக்கவுள்ளார். இப்படத்தை வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சென்னையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.