"இருமுகன்' படத்தைத் தொடர்ந்து ஹரியின் இயக்கத்தில் "சாமி' படத்தின் இரண்டாம் பாகத்தில் விக்ரம் நடிப்பதாக பேசப்பட்டு வந்தது. ஆனால், இதில் மாற்றம் ஏற்பட்டு "வாலு' படத்தின் இயக்குநர் விஜய்சந்தர் இயக்கத்தில் நடிக்கிறார். விக்ரமின் 53-ஆவது படமாக உருவாகவுள்ள இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. மூவிங் பிரேம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 10-ஆம் தேதி சென்னையில் தொடங்கியுள்ளது. விக்ரம் ஜோடியாக நடிப்பதற்கு காஜல் அகர்வால், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தன. மூவருமே வெவ்வேறு படங்களில் நடித்து வருவதால், அவர்களிடம் கால்ஷீட் பெறுவதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து தற்போது தமன்னா தேர்வாகியுள்ளார். சூரி, ராதாரவி, ரவிகிஷன், ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்டோர் கதையின் பிரதான வேடங்களில் நடிக்கின்றனர். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். கலை இயக்குநராக மாயாபாண்டி பணியாற்றுகிறார். சண்டை பயிற்சி இயக்குநராக ரவிவர்மன் பணியாற்றுகிறார். ரூபன் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். சென்னை மீனம்பாக்கம் பின்னி மில்லில் பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு துவங்கியுள்ளது.