எஸ் பிக்சர்ஸ் தயாரித்து, சிம்பு தேவன் இயக்கத்தில் வெளிவந்த படம் "இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி'. பெரும் வெற்றி பெற்ற இப்படம், வடிவேலுக்கு மிகப் பெரும் மைல் கல்லாகவும் அமைந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், "இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி' என்ற பெயரில் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியானது. ஷங்கர் - சிம்புதேவன் - வடிவேலு என அதே கூட்டணி இதில் இணைந்தது.
சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியது. வடிவேலு பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து விசாரித்தால்... வடிவேலுவுக்கும், படக்குழுவினருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாம். விரைவில் தொடங்குவதற்கு வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதுவரை 2 முறை பேச்சுவார்த்தை நடத்தியதில், எவ்வித முன்னேற்றமும் இல்லை. படத்திற்கான அரங்குகள் மற்றும் அனைத்து நடிகர்களுக்கும் சம்பளம் கொடுக்கப்பட்டு இருப்பதால் படம் கைவிடப்படுவதற்கு வாய்ப்பில்லை என்கிறது படக்குழு.
முன்பாக, வடிவேலுவுடன் சம்பளப் பேச்சுவார்த்தை நீண்ட நாட்கள் நடைபெற்றதால், படப்பிடிப்பும் தாமதமாகத் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.