முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர்...
தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராக முதல்வர் ஜெயலலிதா விளங்கினார். 1989ஆம் ஆண்டு திமுக தலைமையில் ஆட்சி அமைந்த போது அதிமுகவுக்கு தலைமை வகித்த ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.
மாநிலங்களவையில் 1984 முதல் 1989 வரையில், உறுப்பினராக இருந்து நாடாளுமன்ற அனுபவத்தைப் பெற்றிருந்த அவருக்கு, சட்டப் பேரவையில் உரையாற்றுவதில் எந்தவித தயக்கமும் ஏற்படவில்லை. அப்போது, 9-வது சட்டப் பேரவை 1989 ஆம் ஆண்டு பிப்ரவரியில் அமைக்கப்பட்டது.
அந்தப் பேரவை அமைந்த நேரத்தில், பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக முதல்வர் ஜெயலலிதா உருவெடுத்தார். அப்போது தமிழ்க்குடிமகன் பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா, தமிழ்க்குடிமகனை வாழ்த்திப் பேசினார். இதுவே முதல்வர் ஜெயலலிதாவின் சட்டப் பேரவை கன்னிப் பேச்சாக அமைந்திருந்தது. மேலும், சட்டப் பேரவை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பேரவையின் முதல் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
காங்கயத்தில் வாகை சூடிய ஜெயலலிதா
காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதியில் நின்று வெற்றி பெற்றதோடு, இப்பகுதியில் நிலவிய குடிநீர்ப் பஞ்சத்தையும் போக்கியுள்ளார் ஜெயலலிதா.
இது குறித்து தற்போதைய அதிமுக மாவட்ட எம்.ஜி.ஆர். அணி துணைச் செயலரும், காங்கயம் வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவருமான ஏ.பி.துரைசாமியின் நினைவுப் பதிவு இது...
1991-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கயம், பர்கூர் ஆகிய 2 தொகுதிகளில் அதிமுக பொதுச் செயலர் ஜெ.ஜெயலலிதா போட்டியிட்டார். 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, முதல்வராகப் பொறுப்பேற்றார். பின்னர், காங்கயம் தொகுதி உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து, ஆர்.எம்.வீரப்பனை போட்டியிட வைத்து, அவரையும் வெற்றி பெறவைத்தார்.
வாக்குறுதி அளித்தது போலவே, 1992-ஆம் ஆண்டு காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் கொண்டு வந்தார்.
மேலும், 2014-ஆம் ஆண்டு ரூ.94 கோடி திட்ட மதிப்பீட்டில் 2-ஆவது காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டமும் ஜெயலலிதாவால் துவக்கப்பட்டு, அதற்கான பணிகள் முடிந்து இன்னும் ஓரிரு மாதங்களில் குடி தண்ணீர் விநியோகம் செய்யப்பட உள்ளது என்றார்.