எரிகிற தீயில் எண்ணெய் வார்க்காதீர்!

தமிழ் - தமிழினம் என்னும் உணர்வு தமிழ் மக்களுக்குப் புதிதல்ல. பிற மொழிச் சொற்களைத் தமிழ் ஒலிப்பியலுக்கேற்ப திரித்து வழங்குதலே மரபாகும்' என்றதன்



தமிழ் - தமிழினம் என்னும் உணர்வு தமிழ் மக்களுக்குப் புதிதல்ல. பிற மொழிச் சொற்களைத் தமிழ் ஒலிப்பியலுக்கேற்ப திரித்து வழங்குதலே மரபாகும்' என்றதன் வழியாகத் தமிழ்ப் பாதுகாப்பு என்னும் மொழியுணர்வைப் பதிவு செய்கிறார் தொல்காப்பியர். 
சங்கப்புலவர்களில் வெள்ளைக்குடி நாகனார், சேர, சோழ, பாண்டிய மன்னர் மூவரையும் தண் தமிழ்கிழவர்' எனக் குறிப்பிடுகிறார். கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார், தமிழ் வழங்கும் நிலப்பரப்பு முழுவதையும் வையக வரைப்பில் தமிழகம்' என குறிப்பிடுகிறார். இமிழ் கடல் வேலித் தமிழகம்' எனக் கூறுகிறார் குமட்டூர்க் கண்ணனார். 
வடவாரியர் படைகடந்து தென் தமிழ்நாடு ஒருங்கு கண்ட பாண்டியன் நெடுஞ்செழியன்' எனச்சுட்டுகின்றார் இளங்கோவடிகள். சேர, சோழ, பாண்டிய வேந்தர்களும், குறு நில மன்னர்களுமாகத் தம்முள் முட்டி மோதிக் கொண்டதான தலையாலங்கானப் போரை'க் குறிப்பிட வந்த குடபுலவியனார் தமிழ் தலைமயங்கிய தலையாலங்கானம்' அதாவது, தமிழர்கள் தமக்குள்ளாக மயங்குதலுற்ற தலையாலங்கானம்' எனக்கூறுகிறார். 
இங்கே தமிழ்' என்பது தமிழினம்' என்றாகிறது. சேரன் செங்குட்டுவன் வாய்மொழியாக, வடபுலத்தரசர்களான கனக-விசையர் அருந்தமிழாற்றல் அறிந்திலர்' என குறிப்பிடுகிறார் இளங்கோவடிகள். இங்கே தமிழ் என்பது தமிழர் வீரம் எனப்பொருளாகிறது. பத்துப் பாட்டில் ஒன்றான குறிஞ்சிப் பாட்'டின் அடிக்குறிப்பு ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ்அறிவித்ததற்குக் கபிலர் பாடியது' என்றிருக்கிறது. இங்கே தமிழ் என்பது ஒருத்திக்கு ஒருவன்' என்னும் தமிழரின் பண்பாட்டைக் குறிப்பதாகிறது. 
திருமறைக்காடு சிவன் கோயிலில் ஒருபுறம் வட மொழி வழிபாடும், ஒருபுறம் தமிழ் வழிபாடும் நடைபெற்றதை, ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்' எனக் கூறுகிறார் அப்பர் பெருமான். இவ்விடத்தே, ஆரியன்' என்பது வடமொழியையும், தமிழன் என்பது தமிழ் மொழியையும் குறிப்பனவாகின்றன. உனது நாடு யாது' என்னும் வினாவுக்கு எனது நாடு தமிழ்நாடு' எனலே நேரான விடையாகும் என அறிவுறுத்துகிறார் தொல்காப்பிய உரையாளர் இளம்பூணர். 
ஆக வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்தமிழ் வழங்கிய நிலப்பரப்பில் தமிழ்நாடு' என்னும் பெயரில் எந்தப் பகுதியும் அமையவில்லை என்பது உண்மையானாலும் தமிழ் பேசும் நிலப்பரப்பு முழுவதையும் தமிழகம்', தமிழ்நாடு' எனவும், தமிழ் மக்களைத் தமிழர்' எனவும் குறிப்பிடுதல் இன்று கடைபரப்பும் புதுச் சரக்கல்ல என்பது உண்மையாகும். 
திருக்குறளில் தமிழன்', தமிழ்' தமிழ்நாடு' என்னும் சொல்லாட்சிகள் மட்டுமல்ல இந்து', இந்தியன்', இந்தியா', பாரதம்', பாரதகண்டம்', என்பனவும் இல்லை என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். 
ஆங்கிலேயர் காலம் வரையும் தமிழ் வழங்கும் நிலப்பரப்பு முழுமையும் தமிழ்நாடு' என்னும் பெயரில் ஒரே நாடாக இருந்ததில்லை என்பது போலவே, அப்போது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையுள்ள நிலப்பரப்பு முழுமையும் ஒரு நாடாக - ஒரே அரசாக அதுவும் இந்தியா என்னும் பெயரில் இருந்ததில்லை என்பதுதானே உண்மை? பரதன் என்பவன் பாரதம் முழுமையும் அரசாண்டான் எனச் சொல்லக் கூடும். 
வரலாற்றுச் சான்று ஏதுமில்லாத புராணக் கதையை ஆதாரமாக்கி, பரதன் என்பவன் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையுமான நிலப்பரப்பு முழுமையும் அரசாண்டதாகப் பொருள் விரித்தல் கேலிக்கூத்தன்றி வேறல்ல. 1911 மக்கட்தொகைக் கணக்கெடுப்பிற்கு முன்பு இந்து மதம்' என்னும் சொல்லாட்சி உண்டா? இந்து' என்பது எந்த மொழிச் சொல்? என்ன ஆதாரம்? இந்து என்பதை நமக்கான பொதுப் பெயராக ஆங்கிலேயர் சூட்டியதால் நாம் பிழைத்துக் கொண்டோம்' என்கிறார் காலஞ்சென்ற காஞ்சி பரமாச்சாரியார். 
இன்றைய இந்தியா என்னும் கட்டமைப்பு ஆங்கிலேயர் நமக்களித்த கொடை என்னும் செய்நன்றி மறத்தல் நன்றன்று.அவ்வளவேன், இந்திய தேசியக் காங்கிரசு என்னும் அமைப்பை ஏற்படுத்தியதன் வழியாக இந்திய தேசியம் என்பதைத் தோற்றுவித்தவர்களே ஆங்கிலேயரல்லவா? தேசியம் என்பதே பதினேழாம் நூற்றாண்டில் உருப்பெற்ற புதுத்தத்துவமன்றிப் பழைமையான வாதமல்லவே? 
இன்றைய சிக்கல் என்ன? இந்திய தேசியமா - தமிழ்த் தேசியமா என்பதுதான். இடையில் கட்டமைக்கப்பட்ட திராவிட தேசியம், 1962-இல் பெற்றவளே பிள்ளையைக் கொல்வது போலக் கட்டமைத்தவர்களாலேயே கொல்லப்பட்டு விட்டது. 
இன்றைய தமிழ்த் தேசியவாதிகளில் ஒரு சாரார் செத்த பாம்பை அடிக்கும் தீரர்களாக திராவிட தேசிய மறுப்பு வாதத்தில் காலங்கழித்தல் ஒருபுறம் இருக்கட்டும். இந்தியா என்னும் அமைப்பு அப்படியே தொடர வேண்டுமா - பழையபடி வெல்வேறு நாடுகளாக வேண்டுமா என்பதுதான் இப்போதைய விவாதப் பொருளாகிறது. இவற்றில் எதுசரி என்பதை முடிவு செய்ய, பழங்கணக்கு பார்த்தல் பயன்படாது. இன்றைய சூழலில் எது நன்மையாவது என்னும் அணுகுமுறையே சரியான முடிவுக்கு வழிவகுக்கும். 
சில தலைமுறைகளுக்கு முன்பு கூட்டுக்குடும்பமே வழிமரபாக இருந்தது. இன்றைய சகோதரர்கள் ஒரே ஊரில் ஒரே தொழில் இருந்தாலும் கூட்டுக் குடும்பம் என்பதில்லை. மகனுடன் பெற்றோர்' என்னும் கூட்டுக் குடும்ப எண்ணிக்கை குறைவதன்றிக் கூடுவதாகத் தெரியவில்லை. சகோதரர்களின் கூட்டுக் குடும்பமா - தனிக் குடும்பமா என்பதை சகோதரக் குடும்பங்களின் உறுப்பினர் அனைவரின் நலனுக்கும் எது துணையாவது என்னும் அணுகுமுறையில்தான் முடிவு செய்ய வேண்டும். அதே அணுகுமுறைதான் இந்திய தேசியமா - தமிழ்த் தேசியமா என்பதற்கும். 
என்னவானாலும் கூட்டுக்குடும்பமே சரி என்பதும், என்ன நேர்ந்தாலும் இந்திய தேசியத்தை விடக்கூடாது என்பதும் எவ்வளவுக்குப் பிழையோ அவ்வாறே, என்னவாயினும் தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்பதும், என்ன நடந்தாலும் தமிழ்நாடு தனிநாடாக வேண்டும் என்பதும் பிழையானது.
தேசியம் மொழிவழியில் அமைவதில்லை, கலாசார வழியில் அமைவது. இந்தியா முழுமையும் இந்துக் கலாசாரமாவதால் இந்திய தேசியமே சரியானது என்பது முற்றிலும் கேலிக்கூத்தாகிறது. எப்படி? ஐரோப்பா கண்டம் முழுமையும் மதம் ஒன்று; வழிபடும் தெய்வம் ஒன்று; செல்லும் புனிதத் தலமும் ஒன்று. எனவே மதவழிப்படும் கலாசாரம் என்பதும் ஒன்றன்றி வெவ்வேறல்ல. ஆனாலும் ஐரோப்பா முழுமையும் கலாசார அடிப்படையில் ஒரே நாடாகவில்லை. மொழியடிப்படையில் வெவ்வேறு நாடுகளாகத்தான் இருக்கின்றன. எனவே, கலாசார ஒற்றுமை அரசியல் ஒற்றுமையாகாது. 
இசுலாமிய நாடுகள் பலவாதலையும் உள்ளங்கொள வேண்டும். அவ்வளவேன்? ஒரு மொழி ஒரு மதம் ஒரே கலாசாரம்' என்னும் தெலுங்கர்கள் இருவேறு மாநிலத்தார் ஆகிவிட்டனர். அதே வகையான பிரிவினைக்குரல் கர்நாடகத்தில் கிளம்புகிறது. ஆக மொழி, மதம், கலாசாரம் என்பவற்றினும் வாழ்வியல் நன்மையே ஒற்றுமைக்கும், பிரிவினைக்கும் அடிப்படையாதல் பட்டறிவாகும் உண்மையாகிறது. இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்ததற்கும், பிரிந்ததற்கும் மொழியோ மதமோ, கலாசாரமோ காரணமல்லவே?
எனவே, இந்திய தேசியமா-தமிழ்த் தேசியமா-அதாவது இந்தியக் கூட்டமைப்பில் இருப்பதா - தனி நாடாவதா என்பதை முடிவு செய்தல் எப்படி? இந்தியா என்னும் அமைப்பில் இருப்பதுதான் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் தமிழரின் முன்னேற்றத்திற்கும், தமிழ்நாட்டின் வளமைக்கும் துணையாவது, பாதுகாப்பானது எனும் சூழலை ஏற்படுத்துவதுதான் இந்திய தேசியத்தை - இந்தியா என்னும் கட்டமைப்பை வலுப்படுத்துவதாகும். 
மாறாக, இந்தியை - சமசுக்கிரதத்தை திணிப்பதன் வழியாகத் தமிழின் தூய்மையை - முதன்மையைத் தடுத்தல், பொதுக் கல்வித்திட்டம்', பொதுப் பாடத்திட்டம்', பொதுத் தேர்வு' - பொது நுழைவுத் தேர்வு' எனத் தமிழக இளைஞர்களின் முன்னேற்றத்தைத் தடுத்தல், மீத்தேன்' கைட்ரேட்', காப்பர்', வளர்ச்சி' எனப் பலப்பல சொல்லித் தமிழகத்தை வறண்ட பாலைவனமாக்குதல் இவையெல்லாம் பிரிவினையுணர்வு என்னும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றும்செயலாகவே முடியும். 
தமிழ்நாட்டில் தமிழைப் பயிற்றுமொழியாக்கவும், வழக்காடு மொழியாக்கவும் தில்லியின் ஒப்புதல் தேவையென்பது சுதந்திரமா - அடிமைத்தனமா? ரசிய மொழியின் மேலாதிக்கத்தால் மற்ற மாநில மொழியாளர்களிடையே ஏற்பட்ட கசப்புணர்வும் சோசலிச சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கொரு காரணமாயிற்று என்பதையும் நினைவிற் கொள்ளும்போது, இந்தியாவை சமசுகிருதம் - இந்து என ஒரு முகமாக்கும் இந்துத் தேசியத்தின் எதிர்மறையான விளைவு என்னவாகும் என்பதைப் புரிந்து கொள்ளவில்லையானால் நட்டம் மற்றவர்க்கல்ல. 
அதாவது, இந்தியாவின் பன்முகத்தன்மையை ஓரளவுக்கேனும் உடன்படும் இந்தியத் தேசியத்தினும் இந்தியாவை சமசுகிருதம்-இந்து எனும் ஒருமுகமாக்க முயலும் இந்து தேசியத்தின் எதிர்விளைவு இன்னும் கடுமையாகும். சி.பி.எஸ்.இ எனும் பொதுப் பாடத்திட்டப்படியான வரலாற்றுப் பாடப்புத்தகத்தில் கல்லணை கட்டிய கரிகாலன், கடாரம் வென்ற இராசேந்திரன் மற்றும் சுதந்திரப் போராட்டம் பகுதியில் பாரதியார், வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, இராசாசி, முத்துராமலிங்கதேவர், காமராசர் உள்ளிட்ட பழுத்த தேசியவாதிகள் பற்றிய குறிப்புகள் உண்டா? 
இவையெல்லாம் பிரிவினையுணர்வை அழிக்குமா - வளர்க்குமா? 
இறுதியாக நமது கனிவான வேண்டுகோளாவது: எரிகிற தீயில் எண்ணெய் வார்க்காதீர்!'
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com