புயல், மழை காரணமாக பருவத் தேர்வுகள் தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு வந்த நிலையில், வியாழக்கிழமை முதல் தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மழை காரணமாக பல்கலைக்கழக துறைகள், இணைப்புக் கல்லூரிகளுக்கான பருவத் தேர்வுகளை ஒத்திவைத்து, அவற்றுக்கான மறு தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. சென்னையில் திங்கள்கிழமை (டிச.12) வீசிய "வர்தா' புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்தன. மின்விநியோகம் பாதிக்கப்பட்டது.
இதன் காரணமாக, இணைப்புக் கல்லூரிகளுக்கு புதன்கிழமை (டிச.14) நடத்தப்பட இருந்த தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது. இதற்கிடையே, சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின் விநியோகம் புதன்கிழமை சீர்செய்யப்பட்டது. சாலையில் விழுந்துகிடந்த மரங்களும் பெரும்பாலான இடங்களில் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, பருவத் தேர்வுகள் வியாழக்கிழமை (டிச.15) முதல் வழக்கம்போல் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மறு தேதி: மேலும், புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இணைப்புக் கல்லூரிகளுக்கான டிசம்பர் 14 -தேதி பருவத் தேர்வு, அடுத்த மாதம் 2 -ஆம் தேதி (ஜன.2) நடத்தப்படும் எனவும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.