இஎஸ்ஐ ஊழியர்களின் வாரிசுகளுக்கான எம்பிபிஎஸ் கலந்தாய்வு நாளை தொடக்கம்

இஎஸ்ஐ செலுத்தும் ஊழியர்களின் வாரிசுகளுக்கான எம்பிபிஎஸ் இரண்டாம்கட்ட கலந்தாய்வு சனிக்கிழமை (ஆக.5) தொடங்க உள்ளது.

இஎஸ்ஐ செலுத்தும் ஊழியர்களின் வாரிசுகளுக்கான எம்பிபிஎஸ் இரண்டாம்கட்ட கலந்தாய்வு சனிக்கிழமை (ஆக.5) தொடங்க உள்ளது.
தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகத்தின்(இஎஸ்ஐசி) சார்பில் நாடு முழுவதும் 6 மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. ஹரியானா மாநிலம் 'ஃ'பாரிதாபாத், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத், கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் குல்பர்கா , தமிழகத்தில் சென்னை கே.கே.நகர் என 6 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
மேலும் ஹிமாச்சல பிரதேசம் மண்டி, கேரள மாநிலம் கொல்லம், தமிழகத்தில் கோவை ஆகிய இடங்களில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகள் அந்தந்த மாநில அரசால் நடத்தப்பட்டாலும், இஎஸ்ஐ செலுத்தும் ஊழியர்களின் வாரிசுகளுக்கு இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
அந்த வகையில், இந்தக் கல்லூரிகளில் மொத்தம் 332 எம்.பி.பி.எஸ். இடங்களும், 22 பிடிஎஸ் இடங்களும் இஎஸ்ஐ ஊழியர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களுக்கான கலந்தாய்வையும் மத்திய அரசே (டிஜிஹெஎஸ்) நடத்துகிறது.
இதற்கான முதற்கட்ட கலந்தாய்வில் 326 இடங்கள் நிரப்பப்பட்டன. மீதமுள்ள இடங்களுக்கும், முதற்கட்ட கலந்தாய்வில் இடங்களைப் பெற்று, குறிப்பிட்டக் கல்லூரிகளில் சேராமல், நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்குமான இரண்டாம்கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 5 முதல் 7 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கலந்தாய்வுக்கான முடிவு ஆகஸ்ட் 8 -ஆம் தேதி வெளியிடப்படும்.
கட்டணம்: கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைப் பெறுவோருக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.24 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் படித்து முடித்து 3 ஆண்டுகள் இஎஸ்ஐ மருத்துவமனையில் கட்டாயம் பணியாற்றுவதற்கான ஒப்பந்தத்தையும் அவர்கள் அளிக்க வேண்டும்.
ஒருவேளை படிப்பில் இருந்து பாதியில் சென்றாலோ, கட்டாயம் பணியாற்றுவதைத் தவிர்த்தாலோ ரூ.10 லட்சத்தை இஎஸ்ஐ நிறுவனத்துக்கு செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com