பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு வெள்ளிக்கிழமையுடன் நிறைவுபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இடம் பெற்றுள்ள அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஜூலை 17-ஆம் தேதி தொடங்கியது. முதலில், பிளஸ் 2 தொழில் பிரிவு மாணவர்களுக்கும், பின்னர் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கு சேர்க்கை நடத்தப்பட்டது. அதன் பிறகு பொதுப் பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை ஜூலை 23-ஆம் தேதி தொடங்கியது. பொதுப் பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 11-ஆம் தேதியோடு முடிவடைகிறது.
இந்நிலையில், பொதுப்பிரிவினருக்கென கலந்தாய்வில் ஒதுக்கப்பட்டிருந்த 1லட்சத்து 75,456 பி.இ. இடங்களில் 79,315 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. 96,141 இடங்கள் நிரம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ஆர்க். சேர்க்கை: பி.இ. பொதுப் பிரிவு சேர்க்கைக்குப் பிறகு, கட்டடவியல் பொறியியல் (பி.ஆர்க்.) சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 19-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டில் வியாழக்கிழமை (ஆக.10) வெளியிடப்படுகிறது.