முதுநிலை பொறியியல் படிப்புகள், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர்வதற்காக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கு (டான்செட்) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 28 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நுழைவுத் தேர்வைப் பொருத்தவரை, எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர வரும் மார்ச் 25 -ஆம் தேதியும், எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான். படிப்புகளில் சேர மார்ச் 26 -ஆம் தேதியும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க பிப்ரவரி 20 கடைசி நாள் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மாணவர்களின் நலனைக் கருதி, விண்ணப்பத் தேதியை பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது. அதன்படி, வரும் 28 -ஆம் தேதி (பிப்.28) வரை இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களை www.annauniv.edu என்ற இணையதளத்தில் பெறலாம்.