பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் நூறு சதவீத இலக்கு வைத்து தேர்ச்சி பெற வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.ராஜேந்திரன் கூறினார்.
திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், திருத்தணி, பள்ளிப்பட்டு வட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் ஆலோசனைக் கூட்டம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டக் கல்வி அலுவலர் லில்லிபுஷ்பராணி தலைமை வகித்தார். இதில், திருத்தணி மகளிர் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை எம்.எம்.ராமலட்சுமி வரவேற்றார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் பங்கேற்றுப் பேசியதாவது:
அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் சென்ற ஆண்டு தேர்ச்சி விகிதம் மற்றும் நடப்பாண்டில் நடந்த காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு சதவீதத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தார்.
அப்போது, தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம், அதற்கான காரணம் குறித்துக் கேட்டறிந்தார். வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வில், நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநிலத்திலேயே முதல் மாவட்டமாக திருவள்ளூர் விளங்க வேண்டும். காலை, மாலை வேளைகளில் நடத்தப்படும் சிறப்பு வகுப்புகளில், கல்வியில் பின்தங்கிய மாணவர்களை தனியாக அமர வைத்து, அவர்கள் தேர்ச்சி பெறும் அளவுக்கு தயார்படுத்த வேண்டும். மேலும், சமூக ஆர்வலர்களிடம் மாணவர்களுக்கு பிஸ்கெட் வாங்கிக் கொடுத்து ஊக்குவிக்கலாம்.
வர்தா புயலால் பொன்னேரி வட்டம் மட்டுமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மற்ற வட்டங்களில் பாதிப்பு ஏதும் இல்லாததால், அனைத்துப் பள்ளிகளும் அரசு பொதுத்தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் என்றார்.
இறுதியாக குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் எளிதாகத் தேர்ச்சி பெற, முக்கிய வினா விடைகள் அடங்கிய புத்தகத்தை பள்ளித் தலைமை ஆசிரியரிடம், முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் வழங்கினார். கூட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.