உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் நாடு முழுவதும் 6,709 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளான டி.எம்., எம்சிஎச் ஆகிய படிப்புகளுக்கு 1,215 இடங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 192 இடங்கள் உள்ளன. இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகள் போன்று உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இந்தப் படிப்புளுக்காக ஜூன் 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற்ற நீட் தேர்வில் நாடு முழுவதும் இருந்து சுமார் 50 ஆயிரம் பேர் தேர்வெழுதினர். தமிழகத்தைப் பொருத்தவரை அரசு மருத்துவர்கள் 1,200 பேர் உள்பட சுமார் 2,500-க்கும் மேற்பட்டோர் தேர்வெழுதினர்.
அதன் முடிவு www.nbe.edu.in இணையதளத்தில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 6,709 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக பொது மருத்துவப் பிரிவில் 2,294 பேரும், பொது அறுவைச் சிகிச்சைப் பிரிவில் 2,354 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதற்கான கலந்தாய்வை அந்தந்த மாநிலங்களே நடந்தி வந்த நிலையில், நிகழ் கல்வியாண்டு முதல் மத்திய அரசே இதற்கான கலந்தாய்வை நடத்த உள்ளது. கலந்தாய்வு குறித்த விவரங்கள், மாணவர் சேர்க்கை நடைமுறை, தகவல்கள் உள்ளிட்டவற்றுக்கு www.mcc.nic.in மற்றும் www.mohfw.nic.in ஆகிய இணையதளங்களைத் தொடர்ந்து பார்வையிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.