போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள விரைவில் புதிய பாடத் திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன்

அகில இந்திய அளவிலான போட்டித் தேர்வுகளை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
சென்னையில் வியாழக்கிழமை தொடங்கிய புதிய பாடத்திட்டம் குறித்த கருத்தரங்கில் (இடமிருந்து) மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் க.அறிவொளி, அமைச்சர் செங்கோட்டையன்,
சென்னையில் வியாழக்கிழமை தொடங்கிய புதிய பாடத்திட்டம் குறித்த கருத்தரங்கில் (இடமிருந்து) மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் க.அறிவொளி, அமைச்சர் செங்கோட்டையன்,

அகில இந்திய அளவிலான போட்டித் தேர்வுகளை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
பள்ளிக் கல்வித்துறையின் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் புதிய பாடத்திட்டம் குறித்த 3 நாள் கருத்தரங்கம் சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது. கருத்தரங்கை தொடங்கி வைத்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியது:
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாக்கப்படும் இந்த பாடத்திட்டம் நிச்சயம் தரம் வாய்ந்ததாக இருக்கும். அகில இந்திய அளவிலான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள ஒரு புதிய பாடத் திட்டத்தை தமிழக அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதையொட்டி 54,000 கேள்வி-பதில்கள், வரை படங்கள் அடங்கிய தொகுப்பு 15 நாள்களில் வெளியாகும். 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு கணினி, வைஃபை வசதி ஆகியவற்றை வழங்க தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.
பொதுத் தேர்வு நேரங்களில் சில ஊர்களில் மாணவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்து தேர்வெழுத வேண்டியுள்ளது என்ற கோரிக்கையைக் கருத்தில் கொண்டு நிகழ் கல்வியாண்டில் அருகில் உள்ள மையங்களில் தேர்வெழுத வசதியாக கூடுதலாக 200 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்படும். நீட் தேர்வு குறித்து மாணவர்கள், பெற்றோர் அச்சம் கொள்ள வேண்டாம். இந்தத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை: புதிதாக வடிவமைக்கப்படும் புத்தகங்களின் ஒவ்வொரு பக்கமும் மாணவர்களைச் சிந்திக்க வைக்க வேண்டும். ஒரு மாணவனின் கல்வித் தகுதியை மதிப்பிடும் தேர்வு முறையானது, அறிவியல் விளையாட்டு போன்ற எந்தக் குறிப்பிட்ட துறையில் அந்த மாணவன் சிறந்து விளங்குகிறான் என்பதையும் மதிப்பிடும் வகையில் மாற்றப்பட வேண்டும். பாடத்திட்டத்தில் இடம் பெறாத தகவல்களை ஆசிரியர்களும், பெற்றோரும் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும்.
தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் ருஷிகேஷ் சேனாபதி: புதிய பாடத் திட்டத்தில் மனப்பாட முறையைக் காட்டிலும், மாணவர்களின் திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எந்த மாதிரியான பாடங்கள், வடிவமைப்பை விரும்புகிறார்கள் என்பது குறித்து மாணவர்களிடம் கருத்து கேட்கப்பட வேண்டும். புரிதலுக்கு முக்கியத்துவம் அளித்து வடிவமைக்கப்படுவதன் மூலம் தேசிய அளவிலான தேர்வுகளில் தமிழக மாணவர்கள் அதிகளவில் சாதிக்க முடியும்.
கருத்தரங்கில் பள்ளிக் கல்வித் துறைச் செயலர் த.உதயச்சந்திரன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் க.அறிவொளி, பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன், தொடக்கக் கல்வி இயக்குநர் செ.கார்மேகம் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com