தனித்திறன் கொண்ட மாணவர்களுக்கு மேலை நாடுகளுக்குச் செல்ல வாய்ப்பு அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.
சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது வியாழக்கிழமை நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:-அறிவியல், தொழில்நுட்பம், கலை, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் தனித்திறமையோடு விளங்கும் மாணவர்கள் ஊக்குவிக்கப்படுவர். அவர்களில் 100 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மேலை நாடுகளுக்கு கல்விப் பயணமாக அழைத்துச் செல்லப்படுவர். கலை, இலக்கியம், நுண்கலை உள்ளிட்ட 150 வகைப் பிரிவுகளில் மாவட்ட, மாநில அளவில் போட்டிகள் கொண்ட ஒரு மாபெரும் மாணவர் கலை திருவிழா அறிமுகப்படுத்தப்படும்.
கல்விக் கடன் முகாம்கள்: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒன்றியம் தோறும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கல்விக்கடன் முகாம்கள் நடத்தப்படும். கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் பயிற்சி மையம் அமைக்கப்படும். ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இந்த மையத்தில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியை எடுத்துக் கொள்ள உரிய அனைத்து வசதிகளும் செய்யப்படும். மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டிக் கருத்தரங்குகள் மாவட்ட மற்றும் ஒன்றிய அளவில் நடத்தப்படும்.
இணையவழி அனுமதி: மெட்ரிகுலேஷன் பள்ளிகள் தொடங்க அனுமதி, அங்கீகாரம் மற்றும் தொடர் அங்கீகாரம் பெறும் முறைகள் இணையவழியாக்கப்படும். மேலும், அதன் நடைமுறைகள் எளிமையாக்கப்படும்.