மாணவர்கள் கல்லெறிந்து நடத்தியத் தாக்குதலில் பச்சையப்பன் கல்லூரி முதல்வர் தலையில் காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக பத்துக்கும் மேற்பட்டோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பச்சையப்பன் கல்லூரி கோடை விடுமுறைக்கு பின்னர் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. கல்லூரிக்கு வந்த மாணவர்களில் சிலர் பேருந்து தினம் கொண்டாட முயன்றதாகத் தெரிகிறது. இதைத் தடுத்த கல்லூரி நிர்வாகத்தினரும், பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாரும் கல்லூரிக்குள் செல்லுமாறு மாணவர்களை அறிவுறுத்தியுள்ளனர்.
அப்போது உள்ளே நுழைந்த மாணவர்களிடம் அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு கல்லூரி முதல்வர் காளிராஜ் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சிலர், அவர் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர். அதில் காயமடைந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கார் கண்ணாடி உடைப்பு: மாணவர்களில் சிலர் கல்லூரி வளாகத்தில் இருந்த கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில், கல்லூரிக்குள் நிறுத்தப்பட்டிருந்த முதல்வரின் கார் பின்புறக் கண்ணாடி உடைந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பத்துக்கும் மேற்பட்டோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களில் ஒரு சிலர் மட்டுமே மாணவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அந்தக் கல்லூரி பேராசிரியர் சேட்டு கூறியதாவது:
வழக்கம்போல் மாணவர்களின் அடையாள அட்டைகளை சரிபார்த்து அவர்களை உள்ளே அனுமதித்துக் கொண்டிருந்தோம். அப்போது குழுவாக வந்த சிலர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸில் ஒப்படைத்துள்ளோம். இந்தச் சம்பவம் தொடர்பாக, கல்லூரி சார்பில் குழு அமைக்கப்பட்டு விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.