பி.இ. மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான சமவாய்ப்பு (ரேண்டம்) எண் செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) வெளியிடப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை (ஜூன் 22) தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடும்.
தமிழகம் முழுவதும் உள்ள 523 பொறியியல் கல்லூரிகளில் 2.7 லட்சம் பி.இ., பி.டெக். இடங்கள் உள்ளன. இதில் அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் உள்ள பி.இ. இடங்கள் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் வரும் 27 -ஆம் தேதி தொடங்க உள்ளது.
இதற்கான ஆன்-லைன் விண்ணப்பப் பதிவுக்கு மே 1 -ஆம் தேதி தொடங்கி மே 31 -ஆம் தேதி வரை அனுமதிக்கப்பட்டது. ஆன்-லைனில் பதிவு செய்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து சமர்ப்பிக்க ஜூன் 3 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி, பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெற மொத்தம் 1 லட்சத்து 40 ஆயிரத்து 844 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
ஜூன் 22 -இல் தரவரிசைப் பட்டியல்: இந்த நிலையில், விண்ணப்பதாரர்களுக்கான சமவாய்ப்பு எண் (ரேண்டம்) ஜூன் 20 -இல் வெளியிடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூன் 22 -இல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
கலந்தாய்வு ஜூன் 27 -இல் தொடங்கி, ஜூலை 31 -ஆம் தேதிக்குள் முடிக்கப்படும். பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 1 -ஆம் தேதி தொடங்கப்படும்.