நாட்டில் உயர்கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த மத்திய,மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வி.ஐ.டி.பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் வலியுறுத்தினார்.
மேற்கு தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் லியோமுத்து அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில் சாய்ராம் கல்விக்குழுமங்களைச் சேர்ந்த 1,145 மாணவர்களுக்கு ரூ 1.23 கோடி கல்வி உதவித்தொகையை வழங்கி அவர் மேலும் பேசியது:
உலகில் அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு என்ற அழைக்கப்படும் இந்தியாவில் உயர்கல்வி பெறத் தகுதியுடைய 14 கோடி பேர்களில் 3 கோடி பேர்தான் உயர்கல்வி பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
உயர்கல்வி பெறுவோர் எண்ணிக்கையை உயர்த்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகளை பல முறை வலியுறுத்தியும், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
நாட்டின் மொத்த வருவாயில் கல்விக்கு மத்திய அரசு தற்போது ஒதுக்கும் நிதி 4 சதவீதத்தை 6 சதவீதமாக உயர்த்தினால்தான் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை உயரும். மேலும் கல்வி நிறுவனங்கள் தொடங்க மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் தேவைக்கதிகமான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட வேண்டும்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா,பிரிட்டன், கனடா ஆகிய வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றது.
இதன் மூலம் இந்தியாவில் இருந்து இதர நாடுகளுக்குச் செல்லும் அன்னிய செலாவணியைக் குறைக்க மத்திய அரசு புதிய கல்விக்கொள்கை மூலம் உயர் கல்வித் தரத்தை மேம்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் வெளிநாட்டு மாணவர்கள் இங்கு அதிக எண்ணிக்கையில் வந்து பயில வாய்ப்பு அதிகரிக்கும் என்றார் அவர்.