பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதிய 228 கைதிகளில், 203 பேர் தேர்ச்சி பெற்றனர்.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வை கைதிகள் எழுதுவதற்கு, புழல், திருச்சிராப்பள்ளி, கோவை, மதுரை உள்ளிட்ட 5 மத்திய சிறைகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இம்மையங்களில் 9 பெண் கைதிகள் உள்பட 228 கைதிகள் தேர்வெழுதினர்.
9 பெண் கைதிகள் தேர்ச்சி: பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய 228 கைதிகளில் 203 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்வு எழுதிய 9 பெண் கைதிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள கைதி இ.அபுபக்கர் சித்திக் அலி (32), 422 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். புழல் மத்திய சிறைக் கைதி ந.நீலகண்டன் (25) 415 மதிப்பெண்களும் திருச்சி மத்திய சிறைக் கைதி சு.செந்தில்முருகன் (36) 411 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். தேர்வில் சிறப்பிடம் பெற்ற கைதிகளை சிறைத்துறை அதிகாரிகள் பாராட்டினர்.
தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு: கடந்தாண்டு தமிழக சிறைகளில் 226 கைதிகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியதில் 199 பேர் தேர்ச்சி பெற்றனர்.