பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும்
வடகிழக்குப் பருவமழை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் வழக்கம்போல் தொடங்கும்போது மாணவர்கள் நலன் கருதி மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியர் வெ.அன்புச் செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் அவர்களது பெற்றோர் நலனைக் கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த அக்.31-ஆம் தேதி முதல் நவ.6-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கடந்த நவ.1-ஆம் தேதி அனைத்துப் பள்ளித் தாளாளர்கள், முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்காதவாறும் அவற்றுடன் கழிவுநீர் கலக்காதவாறும் நிரந்தர ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மின்கசிவு-சுற்றுப்புறச் சூழல்...பள்ளிகள் அனைத்தும் வழக்கம்போல தொடங்கும்போது பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கவில்லை என்பதையும் பள்ளி மாணவர்களை நோய்த் தொற்று பாதிக்காத வகையில் சுற்றுப்புறச் சூழல் நன்றாக உள்ளது என்பதையும் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் மின்கசிவு இல்லை போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தொடர்புடைய மாவட்டக் கல்வி அதிகாரிகள் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து சான்றளிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் மிகுந்த அக்கறையுடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும்.