சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு அடுத்த ஆண்டு (2018) முதல் ஆன்லைனில் நடத்தப்பட்டு சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என அண்ணா பல்கலைக் கழகத்துக்கு அதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
இது குறித்து அறிவிப்பு கடந்த 6-ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பொறியியல் படிப்புக்களான பி.இ, பி.டெக், பி.ஆர்க், எம்.இ., எம்.டெக், எம்.ஆர்க்., எம்.பிளான், உள்ளிட்ட பட்டபடிப்புகளுக்கு 2018-ஆம் ஆண்டு முதல் ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். இது 3 ஆண்டுகளுக்கு பொருந்தும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஆன்லைனில் கலந்தாய்வு நடத்துவதற்காக புதிய மறுசீரமைப்பு கமிட்டி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கமிட்டியில் அண்ணா பல்கலைக்கழகம் எம்.ஐ.டி. வளாகத்தில் உள்ள தகவல் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் ரைமண்ட் உதரிராஜ் புதிய உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். இவர் ஆன்லைன் கலந்தாய்வு செயலாளராக இருப்பார். ஏற்கனவே, இப்பொறுப்பில் இந்துமதி இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைனில் கலந்தாய்வு நடத்துவதற்கு வசதியாக மென்பொருளை வடிவமைக்கும் பணிகள் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் குழுவிடம் அளிக்கப்பட்டுள்ளது.
வெளியூர்களில் இருந்து பொறியியல் கலந்தாய்வுக்கு வருகை தரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சிரமத்தை தவிர்க்க ஆன்லைன் கலந்தாய்வு நடத்தும்படி உயர் கல்வித்துறை அமைச்சருக்கு அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.