ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு: டிச.1 முதல் விண்ணப்பிக்கலாம்
ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கு (ஜே.இ.இ.) டிசம்பர் 1 -ஆம் தேதி முதல் ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஜே.இ.இ. தேர்வு முதல்நிலை, முதன்மை நிலை (அட்வான்ஸ்டு) என இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. முதல்நிலை தேர்வில் தகுதி பெறுபவர்களில் முதல் 1.5 லட்சம் பேர், அடுத்து நடத்தப்படும் முதன்மைத் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர். இதில் தகுதி பெறுபவர்கள் நாடு முழுவதும் உள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும். தற்போது 2018-ஆம் ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பும், தகவல் கையேடும் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் நேரடி எழுத்துத் தேர்வு 2018 ஏப்ரல் 8 -ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து ஆன்-லைன் தேர்வு ஏப்ரல் 15,16 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளன. இதில் பங்கேற்க www.jeemain.nic.in என்ற இணையதளத்தில் ஆன்-லைனில் டிசம்பர் 1 -ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் ஜனவரி 1 -ஆம் தேதி கடைசி நாளாகும்.