சென்னை, கோவளம், பழவேற்காடு உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் சுனாமி விழிப்புணர்வு ஒத்திகை

செங்கல்பட்டை அடுத்த கேளம்பாக்கம், கோவளம், கல்பாக்கத்தை அடுத்த பரமன்கேணி, பழவேற்காடு உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் சுனாமி விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி வெள்ளிக்கிழமை
சென்னை, கோவளம், பழவேற்காடு உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் சுனாமி விழிப்புணர்வு ஒத்திகை

செங்கல்பட்டை அடுத்த கேளம்பாக்கம், கோவளம், கல்பாக்கத்தை அடுத்த பரமன்கேணி, பழவேற்காடு உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் சுனாமி விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
கேளம்பாக்கம், கோவளம், பரமன்கேணி ஆகிய கடலோரப் பகுதிகளில் சுனாமி விழிப்புணர்வு ஒத்திகை சார் ஆட்சியர்கள் தலைமையில் நடைபெற்றது. 
நிகழ்ச்சியில் காவல் துறை, கடலோர காவல் துறை, போக்குவரத்து, வருவாய், பொதுப்பணித் துறை, தீயணைப்பு, சுகாதாரத் துறை, கடற்படை, ஊரக வளர்ச்சித்துறை, செஞ்சிலுவை சங்கம், தன்னார்வலர் தொண்டு நிறுவனங்கள் மத்திய பேரிடர் மீட்பு படை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டு, சுனாமி உள்ளிட்ட பேரிடர் காலத்தில் மக்களை எவ்வாறு பாதுகாத்து முதலுதவி, மருத்துவ உதவிகள் செய்வது, கை, கால்களில் அடிபட்டால் சிகிச்சை அளிப்பது உள்ளிட்டவை குறித்து ஒத்திகை நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டியில்...: கும்மிடிப்பூண்டியை அடுத்த வல்லம்பேடு குப்பத்தில் நடத்தப்பட்ட ஒத்திகை பயிற்சிக்கு கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஆர்.எஸ்.ராஜகோபால் தலைமை வகித்தார். 
நிகழ்வில் கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ராஜன், கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் தயாநிதி, கும்மிடிப்பூண்டி மண்டல துணை வட்டாட்சியர் தாமோதரன், ஆரம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமலிங்கம், வருவாய் ஆய்வாளர் பாலாஜி முன்னிலை வகித்தனர். இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 83 பேர் பங்கேற்றனர். 
தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள இந்திய பெருங்கடல் சுனாமி முன்னறிவிப்பு அமைப்பின் மூலம் சுனாமி தாக்கக்கூடும் என்ற எச்சரிக்கை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் மூலம் பொன்னேரி கோட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் இதுகுறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தி மீட்பு மற்றும் பாதுகாப்பு குழுவினை வல்லம்பேடு குப்பம் பகுதிக்கு வரவழைத்தார். 
வல்லம்பேடு குப்பம் கிராமத்தில் மாவட்ட நிர்வாகத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்ற அப்பகுதியைச் சேர்ந்த 15 முதல் நிலை பொறுப்பாளர்கள் அக்கிராம மீனவர் கூட்டமைப்பு தலைவர் எல்லப்பன் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் இணைந்து, பொதுமக்களுக்கு சுனாமி எச்சரிக்கை தந்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 
பொன்னேரியில்...: பொன்னேரி வட்டத்தில் கடலோரப் பகுதியான பழவேற்காடு, நக்கத்துறவில் நடத்தப்பட்ட ஒத்திகை நிகழ்ச்சியில், சுனாமி ஆழிப்பேரலை வருவது போல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அலாரம் ஒலிக்கப்பட்டது. பேரிடர் மீட்புக் குழுவினர் அங்கிருந்த உயரமான கட்டடங்களில் ஏறி, கொடியசைத்து கடலில் இருக்கும் படகுகளை உள்ளே செல்லுமாறு ஒலிப்பெருக்கியில் எச்சரித்தனர். 
மேலும் நக்கத்துறவு சென்ற வருவாய்த் துறையினர் அங்கிருந்த மக்களை பேருந்துகள் மூலம் பாதுகாப்பாக அழைத்துச் சென்று ஆண்டாள் மடத்தில் உள்ள அரசு சமுதாய நலக் கூடத்தில் தங்க வைத்தனர். மேலும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களை பேரிடர் மீட்புக் குழு மற்றும் தீயணைப்புத் துறையினர் கடற்கரை பகுதிக்கு சென்று மீட்டனர். 
மீட்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைகள் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகைகள் நடத்தப்பட்டன. 
நிகழ்ச்சிகளில் தேசிய பேரிடர் மீட்பு துறையினர், வருவாய்த் துறையினர், சுகாதாரத் துறையினர், தீயணைப்புத் துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர், மின்சாரத் துறை, மீன்வளத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் போலீஸார் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com