முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி, பள்ளி மாணவ -மாணவிகளுக்கு கலைப் போட்டிகளை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ் வளர்ச்சித் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் மன்றம் சார்பில் மாநிலம் முழுவதும் வரும் 6 -ஆம் தேதி, 11, 12 -ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள், அவர்கள் பயிலும் பள்ளி தலைமையாசிரியரிடம் உரிய படிவத்தில் பரிந்துரையை பெற்று, போட்டி நாளன்று அதனை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை அல்லது உதவி இயக்குநர்களிடம் நேரில் அளிக்க வேண்டும்.
போட்டி விதிமுறைகள், விண்ணப்பப் படிவத்தை, தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.org என்ற இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். போட்டிக்கான தலைப்புகள் போட்டி தொடங்கும்போது அறிவிக்கப்பெறும். போட்டி முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும்.
ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 10,000, இரண்டாம் பரிசாக ரூ. 7000, மூன்றாம் பரிசாக ரூ.5000 மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.