பி.ஆர்க். கட்டடவியல் பொறியியல் படிப்பில் சேருவதற்கான 'நாடா' நுண்ணறி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மார்ச் 30 -ஆம் தேதி வரை இந்தத் தேர்வுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்.
பி.ஆர்க். படிப்பிகளில் சேர்க்கை பெற 'நாடா' (தேசிய கட்டடவியல் நுண்ணறி தேர்வு) தேர்வில் தகுதி பெறுவது கட்டாயம். இத்துடன், பிளஸ் 2 தேர்வில் கணிதத்தை ஒரு பாடமாகக் கொண்டு 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2018 -ஆம் ஆண்டுக்கான 'நாடா' தேர்வை அண்மையில் அறிவித்த கட்டடவியல் கவுன்சில், தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 2 கடைசி என அறிவித்திருந்தது. இந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மார்ச் 30 -ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
பிளஸ் 2 முடித்தவர்களும், தற்போது பொதுத் தேர்வு எழுதுபவர்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் விவரங்களை www.nata.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.