எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து இன்று மாலை 5.30க்குள் தங்களது விண்ணப்பங்களை சமர்பிக்கலாம்.
நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தனித் தேர்வர்களும் நீட் தேர்வில் பங்கேற்கலாம் என்ற தில்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவிட்டது. மேலும் நீட் தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயமில்லை என்றும் அதற்கு பதிலாக ரேசன் அட்டை, கடவுச்சீட்டு, வங்கிக் கணக்கு எண், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏதாவது அரசு அடையாள அட்டையின் எண்ணைக் குறிப்பிட்டால் போதுமானது. நீட் தேர்வுக்காக வழங்கப்பட்டுள்ள இதர விதிமுறைகள் எதிலும் மாற்றமில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, அதிக எண்ணிக்கையிலானோர் விண்ணப்பிக்கும் வகையில் தேர்வுக்கான கால அவகாசம் இன்று திங்கள்கிழமை (மார்ச்.12) வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று திங்கள்கிழமை (மார்ச் 12) மாலை 5.30 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான கட்டணத்தை இணையதளத்தில் நாளை செவ்வாய்கிழமை (மார்ச் 13) இரவு 11 மணிக்குள் செலுத்த வேண்டும்.
மேலும் விண்ணப்பத்தில் திருத்தங்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை ஆன்லைனிலேயே மார்ச் 15 முதல் 17-ஆம் தேதி வரை செய்துகொள்ளலாம்.
இதுவரை விண்ணப்பிக்காத விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பிக்கலாம்.