பிஎஸ்என்எல் சார்பில் 15 முதல் இலவச வேலைவாய்ப்புப் பயிற்சி
பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் இலவச வேலைவாய்ப்புப் பயிற்சி முகாம் இம் மாதம் 15 ஆம் தேதி தொடங்க உள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி தொலைத்தொடர்பு மாவட்டத்தின் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் ப.முருகானந்தம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிஎஸ்என்எல், தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் சார்பில் வேலைதேடும் இளைஞர்களுக்கான 6 வாரகால இலவச வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
வண்ணார்பேட்டையில் உள்ள பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகத்தில் இம் மாதம் 15 ஆம் தேதி பயிற்சி தொடங்கும். இப்பயிற்சியை பெறும்பட்சத்தில் பிராட்பேன்ட் மோடம் மற்றும் பிராட்பேன்ட் தொழில்நுட்பக் கருவிகள் குறித்து அறிவதோடு, அவற்றில் பழுது ஏற்பட்டால் அதை சரிசெய்து பராமரிக்கும் திறனையும் வளர்த்துகொள்ளமுடியும். பயிற்சி நாள்களில் ரூ.100 வீதம் பயணப்படியும் வழங்கப்படும்.
இப்பயிற்சியில் சேர விரும்புவோர் http//rgmttc.bsnl.co.in/jobportal என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். ஏற்கெனவே பதிவு செய்திருந்தால் அதுவே போதுமானது. நேர்முகத் தேர்வு குறித்த விவரங்கள் பதிவு செய்தவர்களுக்கு நேரடியாகத் தெரிவிக்கப்படும்.
நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களோடு பதிவு செய்த விண்ணப்பத்தின் இரண்டு பிரதிகள், ஆதார் அட்டை இரு நகல்கள் கொண்டு வர வேண்டும். மேலும், விவரங்களுக்கு 0462-2500976 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.