ஐக்கிய அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் சுற்றுலா (விசிட்) விசா மூலம் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் இருந்து சுற்றுலா விசா மூலம் ஐக்கிய அரபு நாடுகளுக்கு வேலைக்குச் செல்பவர்கள், வேலைக்குச் சென்ற இடத்தில் ஏமாற்றப்படுவதாகவும், உணவு, அடிப்படை வசதிகள் மற்றும் ஊதியம் வழங்காமல் பணி செய்ய துன்புறுத்தப்படுவதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் விசிட் விசா மூலம் ஐக்கிய அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்ல வேண்டாம் என துபை நாட்டுக்கான இந்திய தூதரகம் எச்சரித்துள்ளது.
ஐக்கிய நாடுகளுக்கு வேலைக்காக சென்று ஏமாற்றப்பட்டவர்களை மீட்டு இந்தியா அனுப்பி வைக்க 2016ஆம் ஆண்டில் 225 விமான பயணச் சீட்டுகளும், 2017ஆம் ஆண்டில் 186 விமான பயணச் சீட்டுகளும் அளித்துள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்திய அரசின் மூலம் தடையில்லா சான்று (EMIGRATION CLEARANCE) பெற்று வேலைக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு எந்தவிதப் பிரச்னையும் இல்லை. எனவே, முகவர்கள் சுற்றுலா விசா மூலம் ஐக்கிய அரபு நாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறுவதை நம்பி, யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.