சுருக்கெழுத்து தட்டச்சர் பதவி உயர்வில் புதிய நடைமுறையைப் பின்பற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தர நிலையில் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் எஸ்.ஸ்வர்ணா அண்மையில் வெளியிட்ட உத்தரவு:-
சுருக்கெழுத்து தட்டச்சர்கள் மற்றும் அவர்களைச் சேர்ந்த சங்கங்களிடம் இருந்து ஏராளமான கோரிக்கை மனுக்கள் அரசுக்கு வரப்பெற்றுள்ளன. அதன்படி, சுருக்கெழுத்து தட்டச்சர் தரநிலை 3, தர நிலை 2 என்ற அடிப்படைகளில் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, முழுமையான தகுதி படைத்த சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3-இல் இருப்பவர்கள் 15 ஆண்டுகள் பணிநிறைவைச் செய்திருந்தால் சுருக்கெழுத்து தட்டச்சர் தர நிலை 2 என பதவி உயர்வு அளிக்கப்படும்.
சுருக்கெழுத்து தட்டச்சர் தர நிலை 2-இல் இருப்பவர்கள் 15 ஆண்டுகள் பணியை முடித்தால் அவர்களுக்கு சுருக்கெழுத்து தட்டச்சர் தர நிலை 1 என்ற அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கப்படும் என்று தனது உத்தரவில் ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.