தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தனது வருடாந்திர (2018) கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த அட்டவணையின் கீழ் டிஎன்பிஎஸ்சி நடப்பாண்டில் நடத்தும் தேர்வுகள் தேதி, காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி தங்களின் தகுதிக்கான பணிகளுக்கான தேர்வுக்கு தயார் செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்தப்பட்டியலில் 3223 காலிப்பணியிடங்களை உள்ளடக்கிய 23 பணிகள் மற்றும் பதவிகளுக்கான அறிவிக்கை மற்றும் தேர்வு நாள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பட்டியலிடப்பட்ட பணிகள் மற்றும் பதவிகளில் ஏதேனும் ஒரு சில பதவிக்க்களுக்குத் தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக அட்டவணைக்குரிய காலத்திற்குள் நடத்தப்படமுடியாமல் போகும் தருணங்களில், அடுத்து வரும் ஆண்டுக்கு நீண்டு செல்லக் கூடும்.
தேவை ஏற்படும் தருணங்களில் பட்டியலில் குறிப்பிடப்படாத பணிகள் மற்றும் பதவிகளுக்கும் அறிவிக்கை வெளியிட வாய்ப்புள்ளது. இந்தக் காலிப்பணியிட எண்ணிக்கை தேர்வுக்கு முன்னரோ அல்லது தேர்விற்குப் பிறகும் கூட மாறுதலுக்குட்பட்டது.
இக்கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டு நடத்தப்படவுள்ள அனைத்துத் தேர்வுகளின் முடிவுகள் வெளியிட விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதற்கான அறிவிப்புகள் அவ்வப்போது வெளியிடப்படும். தேவை ஏற்படின், இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகள் சார்ந்த எந்த ஒரு மாற்று அறிவிப்பையும் வெளியிடுவதற்கான உரிமையைத் தேர்வாணையம் தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை காணவும்" எனக் கூறப்பட்டுள்ளது.