ரயில்வேயில் 1 லட்சம் காலிப்பணியிடங்களுக்கு 2 கோடி விண்ணப்பங்கள்: ரயில்வே அதிகாரி அதிர்ச்சி 

ரயில்வே பணிக்கு ஒரே நேரத்தில் லட்சம் பேர் தேர்வு செய்யப்படுவதும், 2 கோடிக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதும் இதுவே...
ரயில்வேயில் 1 லட்சம் காலிப்பணியிடங்களுக்கு 2 கோடி விண்ணப்பங்கள்: ரயில்வே அதிகாரி அதிர்ச்சி 

புதுதில்லி: இந்திய ரயில்வேயில் 1 லட்சம் குரூப் சி மற்றும் குரூப் டி காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்புக்கு இதுவரை 2 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளதை கண்டு அதிகாரிகள் வியப்படைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரயில்வேயில் உள்ள 89 ஆயிரத்து 409 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்திருந்தது. இதற்கான எழுத்துத் தேர்வை தற்போது தமிழ் உள்ளிட்ட 15 மொழிகளிலும் எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரயில்வே துறையில் காலியாக உள்ள 26 ஆயிரத்து 502 உதவி லோகோ பைலட் குரூப் சி மற்றும் ரயில்வே பாதுகாப்பு பிரிவு 9 ஆயிரத்து 500 பணியிடங்களுக்கான அறிவிப்பும், அதனைத் தொடர்ந்து தண்டவாள பராமரிப்பாளர், டிராக்மேன், கேட்மேன், பாயிண்ட்ஸ்மென், எலக்ட்ரிக்கல், என்ஜினீயரிங், மெக்கானிக்கல், சிக்னல் மற்றும் தொலைதொடர்பு துறை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான 62 ஆயிரத்து 907 "குரூப் டி" அறிவிப்பு மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்பழகுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பையும் தொடர்ந்து வெளியிட்டது. 

இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது என்.சி.வி.டி., எஸ்.சி.வி.டி. அல்லது அதற்கு இணையான அங்கீகரிக்கப்பட்ட ஐடிஐ படித்திருக்க வேண்டும். அல்லது என்.சி.வி.டி. வழங்கிய தேசிய அப்ரண்டிஸ் சான்றிதழ் பெற்றிருப்பவர்கள், 3 ஆண்டு டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்கள்  "குரூப் டி" பிரிவுக்கு மார்ச்.12க்குள்ளும், லோகோ பைலட் பணியிடங்களுக்கு மார்ச் 5க்குள்ளும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்து. பின்னர் அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பிப்பதற்கு மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 

ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ள 1 லட்சம் பணியிடங்களுக்கு ரயில்வே தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

இதனிடையே அனைத்து பிரிவினரும் வேலைவாய்ப்பை பெற வேண்டும் என்ற நோக்கில், ரயில்வே பணிக்கான விண்ணப்பங்களில் பல்வேற்று மாற்றங்களை செய்துள்ள ரயில்வே அமைச்சகம். இதற்கான எழுத்துத் தேர்வை அவரவர்களின் தாய்மொழியிலேயே எதிர்கொள்ளும் வகையில், இதுவரை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே அமைந்திருந்த வினாத்தாள், ஹிந்தி, ஆங்கிலம், உருது, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடா. கொங்கனி, மலையாளம், மணிபூரி, மராத்தி, ஒடியா, பஞ்சாப், தமிழ், தெலுங்கு ஆகிய 15 மொழிகளில் கேள்வித்தாள் அமைந்திருக்கும் என அறிவிக்கப்பட்டது. 

பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு வயது வரம்பில் 2 ஆண்டுகள் கூடுதலாக தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, பொது பிரிவினர், ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் என அனைவருக்கும் 2 ஆண்டுகள் கூடுதலாக தளர்வு வழங்கப்பட்டுள்ளது. 

இந்த மாற்று அறிவிப்புக்கு முன்பு தேர்வு கட்டணமாக ரூ.500 செலுத்தி விண்ணப்பித்தவர்களுக்கு, தேர்வுக்கான கட்டணம் ரூ.100 மட்டும் எடுத்துக்கொண்டு, மீதம் ரூ.400 திரும்ப வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

ரயில்வே பணிக்கு ஒரே நேரத்தில் லட்சம் பேர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பதால் கையில் இருக்கும் இந்த வாய்ப்பை கைநழுவ விட விரும்பதா இளைஞர்கள் சுமார் 1 லட்சம் பணியிடங்களுக்கு இதுவரை 2 கோடி பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். 

இந்நிலையில், சுமார் 1 லட்சம் "குரூப் சி மற்றும் குரூப் டி" பணியிடங்களுக்கும் இதுவரை 2 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளதை கண்டு வியப்படைந்துள்ள அதிகாரிகள், விண்ணப்பிப்பதற்கு இன்னும் 5 நாட்கள் உள்ள நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர்.

ரயில்வே பணிக்கு ஒரே நேரத்தில் லட்சம் பேர் தேர்வு செய்யப்படுவதும், 2 கோடிக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதும் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com