காவலர் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜூலை இறுதி வாரத்தில் உடல் தகுதித் தேர்வு நடைபெறும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில், காவல்துறையில் உள்ள 13,137 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்கள், 1015 இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் 1512 தீயணைப்புப் படை வீரர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த மே மாதம் 21- ஆம் தேதி நடைபெற்றது.
மொத்தம் 410 மையங்களில் தேர்வு நடைபெற்றது. 6.32 லட்சம் பேர் விண்ணப்பித்ததில் 4.82 லட்சம் பேர் தேர்வு எழுதினர். சுமார் 1.50 லட்சம் பெண்களும், 50 திருநங்கைகளும் தேர்வில் பங்கேற்றனர்.
விடைத்தாள்களைத் திருத்தும் பணியில் ஏற்பட்ட தாமதத்தால் தேர்வு முடிவை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்பட்டது. தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை (ஜூலை 7) வெளியிடப்பட்டது. எழுத்துத் தேர்வு முடிவுகளை www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை இம் மாதம் 12- ஆம் தேதி முதல் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் சேர்க்கை எண், பிறந்த தேதி ஆகியவற்றைக் கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உடல் தகுதித் தேர்வு: எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு மாநிலத்தில் 15 மையங்களில் ஜூலை இறுதி வாரத்தில் உடல் கூறு அளத்தல், உடல் தகுதித் தேர்வு, உடல் திறன் போட்டிகள் அந்தந்த சரக டி.ஜ.ஜி தலைமையில் சுமார் 10 நாள்கள் நடைபெறுகிறது.
தேர்வுகள் அனைத்தும் மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் எழுத்துத் தேர்வுக்கு 80 மதிப்பெண்களும், உடல் திறன்போட்டி,உடல் தகுதித் தேர்வு, உடல்கூறு அளத்தல் ஆகியவற்றுக்கு 15 மதிப்பெண்களும், 5 மதிப்பெண்கள் விளையாட்டு சான்றிதழ்களுக்கும் வழங்கப்படுகின்றன.