குரூப் 4 தேர்வுக்கான கலந்தாய்வு வரும் 17 - ஆம் தேதி தொடங்கும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவித்துள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
குரூப் 4 பிரிவில் அடங்கிய இளநிலை உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் கடந்த பிப்ரவரியில் வெளியிடப்பட்டது.
இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதல்கட்ட கலந்தாய்வு, சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் வரும் 17 -ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வழியாகவும், விரைவஞ்சல் வாயிலாகவும் தனியாக அனுப்பப்பட்டுள்ளன.
இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், தரவரிசை, அவர்களின் இடஒதுக்கீட்டுப் பிரிவு, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், தகுதியுடைமை மற்றும் நிலவும் காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர். எனவே, கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டதாலேயே அந்தப் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதாக உரிமை கோர முடியாது.
விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கு குறித்த நேரத்தில் வரத் தவறினால் மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.