சிவதலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பங்குனி விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேர் திருவிழா நடைபெற்றது. தேரோட்டத்தையொட்டி கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் அதிகாலை 5 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினார். ''தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி.. நமச்சிவாய வாழ்க... நாதன் தாள் வாழ்க..'' என்று பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.