திரிபுரி காங்கிரஸுக்குப் பிறகு காரியக் கமிட்டி நியமன விஷயமாக, காந்திஜிக்கும், சுபாஷ் சந்திர போஸுக்குமிடையே நடந்த கடிதப் போக்கு வரவுகளின் நகலை, மகாத்மா காந்தியின் சம்மதத்துடன் ஸ்ரீ. போஸ் இப்போது பிரசுரிக்கிறார்.
காந்திஜிக்கும், போஸுக்குமிடையே அடிப்படைத் தத்துவங்களில் அபிப்ராய பேதமிருக்கிறது என்பது இந்தக் கடிதங்களில் நன்கு புலனாகிறது.
(ரயிலில் எழுதியது)
விலாஸம்: பிர்லா ஹவுஸ்
என் அன்பார்ந்த சுபாஷ்,
பூர்ணமாய் குணமடையும் பாதையில் படிப்படியாய் செளகர்யமடைந்து வருவீர்களென்று நினைக்கிறேன். ஸரத் சந்திர போஸ் எனக்கு எழுதிய கடிதம், நான் அனுப்பிய பதில் இரண்டின் நகல்களையும் இத்துடன் சேர்த்து அனுப்புகிறேன். ஸரத்தின் கடிதம் உங்களது மனோபாவத்தை காட்டுவதாயிருந்தால் மட்டுமே என்னுடைய யோசனைகள் பொருந்தும். எவ்விதத்திலாவது காங்கிரஸின் மத்ய ஸ்தாபனத்திலுள்ள அராஜகம் முடிவு பெற்றாக வேண்டும். நெருக்கடியைப் பற்றி நான் அபிப்ராயங் கூறவேண்டுமென்று நிர்ப்பந்திக்கப்பட்ட போதிலும், உங்களுடைய வேண்டுகோளுக்கிணங்க முற்றிலும் மெளனமாயிருந்து வருகிறேன்.
தீர்மானத்தை நான் முதல் தடவையாகப் பார்த்தது அலகாபாதில். அது மிகவும் தெளிவாயிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் தான் முதலில் காரியத்திலிறங்க வேண்டும். தேசத்தின் வேலையை கவனிப்பதற்கு உங்களுக்கு எவ்வளவு தூரம் தேக திடமிருக்கிறது என்பதை நான் அறியேன். அப்படியில்லாவிடில், நீங்கள் சட்டப்படி அனுஷ்டிக்க வேண்டிய ஒரே வழியைத் தான் பின்பற்ற வேண்டுமென்று நினைக்கிறேன்.
டில்லியில் நான் இன்னம் சில தினங்கள் வரை இருப்பேன்.
பிரியமுள்ள பாபு.
தினமணி (13-05-1939)