ஸ்ரீ. மகாதேவ தேசாய் ஹரிஜன் பத்திரிகையில் பின்வருமாறு எழுதுகிறார்:-
மகாத்மா காந்தியினுடைய உபதேசங்களைப் பரவச் செய்வதற்காக கட்டுப்பாடான ஓர் பிரசார இயக்கம் ஆரம்பிக்க வேண்டியது அவசியமென்று காந்தி சேவா சங்கத்தைச் சேர்ந்த அங்கத்தினரிடையே ஒரு பேச்சு இருந்தது. இதைப்பற்றி விஸ்தாரமாக விவாதிக்கப்பட்டது. எம் மாதிரி பிரசாரம் செய்வதென்று தீர்மானிப்பதற்காக ஒரு கமிட்டியும் ஏற்படுத்தப்பட்டது.
இம்மாதிரி பிரசாரம் அவசியமல்லவா என்று ஒரு அங்கத்தினர் காந்திஜியைக் கேட்டதன் பேரில், இதைப்பற்றி அவர் என்ன அபிப்ராயம் கொண்டிருக்கிறார் என்பது தெரியலாயிற்று.
காந்தீயம் என்று ஒன்று கிடையாது. எனக்குப் பிற்காலத்தில் அம்மாதிரி கோஷ்டி ஒன்றை விட்டுப்போக நான் விரும்ப வில்லை.
புதிய கொள்கைகளையோ தத்துவங்களையோ கண்டுபிடித்து விட்டதாக நான் உரிமை கொண்டாடவில்லை. சத்தியம் என்பது சாச்வதமானது. சாச்வதமான தத்துவமான சத்தியத்தை, நமது தினசரி வாழ்க்கையில் எப்படி பிரயோகிக்கலாம் என்று எனக்குத் தெரிந்த எளிய முறைகளில் பரீக்ஷித்துப் பார்த்திருக்கிறேன்.
மனு ஓர் ஸ்மிருதியை ஏற்படுத்தினார். அம்மாதிரி ஸ்மிருதி எதையும் நான் ஏற்படுத்துவதாக இல்லை. மேதாவியான அந்த ஸ்மிருதி கர்த்தாவுக்கும், எனக்கும் சரி நிகர் சமானம் எதுவும் கிடையாது.
என்னுடைய பரீக்ஷைஷயின் பலனாக நான் அடைந்திருக்கும் அபிப்ராயங்களும், முடிவுகளும் முடிவானதல்ல. நாளைக்கே அவைகளை நான் மாற்றிக்கொள்ளலாம். புதிதாக உலகத்தாருக்கு போதிக்கக்கூடியதெதுவும் என்னிடமில்லை. சத்தியமும், அஹிம்சையும் பர்வதங்களைப்போல் அவ்வளவு பழமையானவை. இவை இரண்டையும் முடிந்த அளவுக்கு விஸ்தாரமாகப் பரீக்ஷித்திருக்கிறேன். நான் செய்திருப்பதெல்லாம் அவ்வளவுதான்.
தினமணி (04-04-1936)