சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 6 ஆண்டுகளுக்குப் பின்னர் இளம்பெண்ணுக்கு இருதய மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் ரெஹானா (20). இவர் கடந்த 4 ஆண்டுகளாக இருதயப் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் இருந்து தானம் பெறப்பட்ட இருதயம் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஜூலை 26-இல் பொருத்தப்பட்டது.
சிகிச்சை நிறைவடைந்து வீடு திரும்ப உள்ள ரெஹானாவை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் திங்கள்கிழமை சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதுதொடர்பாக ராதாகிருஷ்ணன் கூறியது:-
உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில், நாட்டில் தமிழகம்தான் முன்னோடியாக உள்ளது. 2015-ஆம் ஆண்டில் மூளைச்சாவு அடைந்த 156 பேரின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது முதல் 4,677 உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளன. உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை பெற்ற பின்னரும், நோயாளிகளுக்கான மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகிறது என்றார்.
இதுகுறித்து மருத்துவமனையின் இருதய மாற்று அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவர் ஷஷாங்க் கூறுகையில், "2010-ஆம் ஆண்டுக்கு பின்னர் இருதய மாற்று அறுவைச் சிகிச்சை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இது 5-ஆவது இருதய மாற்று அறுவைச் சிகிச்சையாகும்.
மேலும் 3 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர் என்றார்.